திங்கள், 17 மார்ச், 2014

நகரத்தார் திருமகள் விழா

Speech by Mr.Varadarajan in "Nakarathaar Thirumakal" function at Karaikudi.

நீதியரசர் ஏ.ஆர்.எல் அவர்கள் என் மீது அதிக அன்பு கொண்டவர். அவர் நீதிக்கெல்லாம் அரசர். மனு நீதிச் சோழனின் மறுப்பதிப்பு.

அவர் சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்த போது, அவரிடம் பிரபல ஜோதிடர் ஒருவரின் மகன்களுக்கு இடையே நடந்த பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு வந்தது. அந்த வழக்கு 22 வருடங்கள் நடந்து கொண்டிருந்தது. ஜோதிடரின் வாரிசுகள் கடுமையாக மோதிக் கொண்டு இருந்தனர். மூத்த மகன் அப்பாவைப் போலவே ஜோதிடராக இருந்தார். இளைய மகன் வக்கீல். இன்னொருவர் தொழிலதிபர். மோதக் கொள்ள சொல்லவா வேண்டும்.

வழக்கை விசாரித்த நீதியரசர், ஜோதிடரின் மகன்களை சேம்பருக்கு அழைத்தார். அதற்கு முன்னதாக என்ஜினியர் ஒருவரை அழைத்து, சம்பந்தபட்ட வீட்டை பார்க்கச் சொன்னார். தி.நகரில் முக்கியமான இரண்டு சாலைகள் சந்திப்பில் அந்த வீடு இருந்தது. முதல் இரண்டு மகன்கள் ஒரு சாலை வழியாக, கிரவுண்ட் ஃபுளோரை பயன்படுத்தும் வகையிலும், மூன்றாவது மகன் வேறு சாலை வழியாக மாடியை பயன்படுத்தும் வகையிலும் பிரித்து கொடுத்தார், என்ஜினியர்.
ஜோதிடரின் மகன்களிடம் இந்த சமரசத்தைச் சொன்ன நீதியரசர் அவர்கள், ‘எனக்கு குடும்பத்தை பிரிப்பதில் உடன்பாடு இல்லை. உங்கள் தந்தை எவ்வளவு பிரபலமானவர். நீங்கள் பிடிவாதமாக இருப்பதால் பேப்பரில்தான் பிரித்துள்ளேன்’ என்று சொன்னதும் மூன்று மகன்களும் சேம்பரிலேயே தேங்கித் தேங்கி அழ ஆரம்பித்துவிட்டனர். ‘‘எங்கள் தந்தையாராலோ, உறவினர்களாலோ சொல்ல முடியாத விஷயத்தை நீங்கள் புரிய வைத்துவிட்டீர்கள். நாங்கள் ஓரே கூட்டு குடும்பமாக இருப்போம்’’ என்று உறுதியளித்தனர். இன்று வரையில் அவர்கள் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். அவரின் ஒவ்வொரு தீர்ப்பும் கனிவுடனும், மனிதாபிமானத்துடனும் நம்முடைய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றக் கூடியதாகவும் இருக்கும்.
‘‘உலகிலேயே இந்திய கலாச்சாரம்தான் சிறந்தது. அதனை பின்பற்றுங்கள்’’ என்று இங்கிலாந்து பிரதமர் காம்ரூன் சமீபத்தில் அந்நாட்டு மக்களிடம் சொன்னார்.

‘‘இந்தியாவில்தான் குடும்பங்களாகதான் மக்கள் வசிக்கிறார்கள். இதனால் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. இந்தியாவைப் பார்த்து நம் நாட்டு மக்களும் குடும்பங்களாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று சொன்னார். அதற்கு எடுத்துக்காட்டாக நகரத்தார் சமூகம் விளங்குகிறது.

ஒரு சமூகம் சிறக்க வேண்டும் என்றால், குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு குடும்பம் சிறக்க வேண்டும் என்றால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் வேறு வார்த்தைகளில் பாரதிதாசனும் சொன்னார். ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுப்பது குடும்பத்துக்கே கல்வி கொடுப்பதற்கு சமம் என்றான். ‘ரோஜாவின் நகரத்தார் திருமகள்’ புத்தகத்தின் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்துவது ‘ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜன்’ என்ற ஆச்சி. இவர் ரோஜா முத்தையா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்த இடத்தில் நான் ரோஜா முத்தையா அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட முத்தையா அவர்கள், அதற்காக புத்தகங்களை வாங்கினார். பின்னர் படிப்பதில் அவருக்கு ஆர்வம் பெருகியது. புத்தகங்களை தேடி வாங்கிப் படித்தார். அவற்றை வெளியே போட்டுவிடாமல், சேகரிக்கத் தொடங்கினார். அதனை தனது சொந்த ஊரான கோட்டையூரில் சேகரித்து வந்தார். ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத வீட்டுக்கு சமம் என்று கருதினார். வீடு முழுவதும் புத்தகம். அதற்கு மேலும் புத்தகம் குவிந்ததால், பக்கத்தில் இரண்டு வீட்டை வாடகைக்கு எடுத்து புத்தகத்தைச் சேகரித்தார். இது பற்றி கேள்விப்பட்ட சிகாகோ பல்கலைக் கழகம் நூலகளை வாங்கிக் கொள்ள முன்வந்தது. ஆனால் அவரோ தனது சேகரிப்புகள் தமிழகத்திற்கே பயன்பட வேண்டும் என்று சொல்லி அதனை கொடுக்க மறுத்துவிட்டார். அவர் விரும்பிய படி சென்னையில் ஆய்வாளர்களுக்கு பயன்படும் நூலகமாக ரோஜா முத்தையா நூலகம் திகழ்கிறது.

அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணான ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜன், பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாக திகழ்கிறார். புத்தகத்தின் தலையங்கத்தில் அவர் சொல்லியுள்ளதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.
‘‘உலகத்தில் வாழ்க்கை எப்படி வாழ வேண்டுமென்று கற்றுக் கொடுத்தது இரண்டு இனம். அதில் ஒன்று பார்சி. மற்றொன்று நகரத்தார் என்று வரலாறு சொல்கிறது. இப்படி புகழ்பெற்ற நகரத்தார் இனத்தில் கலாச்சார திறவுகோலாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுவதில் நகரத்தார் திருமகள் முனைப்புடன் செயல்படவிருக்கிறது’’ என்று சொல்லியுள்ளார். முன்னோர்களை நினைத்துப் பார்க்கும் யாரும் இதுவரை தோற்றதில்லை. நகரத்தார் திருமகள் இதழும் நூறாண்டை காணும் என்று வாழ்த்துக் கூறி விடைபெறுகிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக