வியாழன், 15 மே, 2014

நம்பினோர்க்கு வரதராசன்! - குமுதம் முன்னாள் ஊழியர் திரு.கருணாகரனின் மீள்.

நம்பினோர்க்கு வரதராசன்!

சென்னையில் பலத்த மழை. தெருக்களில் மழை வெள்ளம். அந்தப் புகைப்படக்காரர் தான் பணியாற்றும் அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தார். வழியில் சாலையில் ஓரிடத்தில் மேன் ஹோல் திறந்திருக்க, அது தெரியாத வகையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. போட்டோ கிராபர் தனது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த மேன் ஹோலில் ஒரு நீண்ட கழியை அடையாளத்துக்கு சொருகி வைத்துவிட்டு, மீண்டும் அலுவலகம் விரைகிறார். இதனை அந்த வழியாக வந்த அவரது முதலாளி பார்க்கிறார். அலுவலகம் வந்தவுடனே அந்தப் புகைப்படக்காரரை நேரில் அழைத்து அவரது சமூக அக்கறையைப் பாராட்டிய அவர், அந்தப் புகைப்படக்காரருக்கு ஆயிரம் ரூபாய் இன்க்கிரீமெண்ட் தருகிறார். அந்த முதலாளி குமுதம் சேர்மன் வரதராசன்.

அவரைப் பற்றி நினைக்கும்போது, நினைவுக்கு வரும் திருக்குறள்,
‘சொலல்வல்லன், சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது’. நான் அதிக ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனம் குமுதம். சுமார் பத்து ஆண்டுகள். என் பன்முகத் திறமை முழுதும் வெளிப்பட்டதும் அங்குதான்.

ஒரு நிர்வாகி, ஓர் ஆசிரியர், ஒரு மனிதவள மேம்பாட்டாளர், ஒரு மனிதாபிமானி, ஒரு நண்பர், ஒரு உளவியல் அறிஞர், கடுங்கோபக்காரர் என்று பல்வேறு ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

நினைத்ததை முடிப்பவர்

அவரது சாதனையாக மனதில் முதலில் வந்து நிற்பது, குமுதத்தில் ராக்கூத்து எனப்படும் இரவுப் பணியை அவர் ஒழித்ததுதான்.

பத்திரிகைத் துறையில் ராக்கூத்து என்பது ரத்தக்களறி இரவுகள். மிகப் பெரும் சவால். கண்கள் எரிய எரிய புலன்கள் மங்கி பொசுங்கி பேஜ் படித்து, ஒரு வழியாக பக்கங்களை இறுதி செய்வோம். முதல்நாள் காலையில் ஆபீஸ் வரும் இஷ்யூ இன்சார்ஜ், மறுநாள் காலையில்தான் இதழ் முடித்து பிரசுக்கு பக்கங்களை அனுப்பிவிட்டு ஆபீசிலிருந்து தூங்கி வழிந்தபடி வீட்டுக்குச் செல்வார். இரவுப் பணி என்பதால் என்னதான் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் புத்தகத்தில் தவறுகள் தவிர்க்கவே முடியாது. நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்கள் மட்டுமே குமுதத்தில் ராக்கூத்து இருந்தது. அந்தக் கலாசாரத்தை குமுதத்தில் முற்றாக ஒழித்தார் வரதராசன். ஏனென்றால், ராக்கூத்து என்பது இஷ்யூ இன்சார்ஜ்க்கு மட்டுமல்ல, நிறுவனத்துக்கும் பெரிய இடர்ப்பாடு.

‘இஷ்யூ முடிக்க லேட் ஆகறதால் புரொடக்ஷன் லேட் ஆகுது. அதனால் கடைக்குப் புத்தகம் போகறது தாமதமாகுது. தவிர, கரெண்ட் செலவு, பிரஸ் ஊழியர்களுக்கு ஓவர் டைம். என்று நிறுவனத்துக்குச் செலவுகளும் அதிகமாகுது. உங்களை யாரும் ஆறு மணிக்கு மேலே ஆபீஸில் இருக்கணும்னு எதிர்பார்க்கலே. முன் கூட்டியே பிளான் பண்ணி, அஞ்சு மணிக்கே கூட இஷ்யூவை முடிச்சுட்டால் கிளம்பிப் போய்க்கிட்டே இருங்க. எனக்குச் சந்தோஷம்தான். இது நியூஸ் மேகஸின் இல்லே. கடைசிச் செய்திக்காக காத்திருக்கறதுக்கு...’ என்று ஒருநாள் கூறியவர், அவரே, எடிட்டோரியல் மீட்டிங்கிலும் உட்கார்ந்தார்.

எங்கெங்கு தாமதம்? எதனால் தாமதம் என்றெல்லாம் கவனித்தார். கட்டுரைகள் வருவதும் தாமதங்களில் ஒன்று என்பதைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு ஐடியாவுக்கும் கெடு வைத்தார். தாமதமாக கட்டுரைகள் வந்தால் அதுகுறிந்து அதிருப்தி தெரிவித்தார். கட்டுரைகள் வந்து சேர்வதை விரைவுபடுத்தினார். கூடுதலாக வடிவமைப்பு ஓவியர்களைப் பணிக்கு அமர்த்தி பணியை முடுக்கி விட்டார். சிறிது சிறிதாக அடுத்த சில வாரங்களிலேயே இரவுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ரசனை மிகுந்தவர்

அச்சுத் துறை, நிர்வாகம் இவற்றில் அவர் திறமை மிக்கவர் என்றால், அவரது எடிட்டோரியல் அறிவு நளினமானது. ரசனை நிறைந்தது. அது அதிகம் வெளியில் தெரியாதது. ஒரு முறை, அதிகமாகக் குடும்பப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகையின் படத்தை அட்டைக்காக தலைப்புகள் வைத்து தயார் செய்து, அவரது அப்ரூவலுக்காக அனுப்பி வைத்தேன். அந்தப் படம் மாடர்ன் உடையில் கொஞ்சம் கவர்ச்சியானது. அவர் அந்த நடிகையின் நிராகரிக்கப்பட்ட மீதமுள்ள போட்டோக்களையும் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வரச் சொன்னார். சென்றேன். ‘இவங்க குடும்பப் படங்களில் நடிச்சுக்கிட்டிருக்காங்க... வாசகர்கள் மனதில் இவங்களுக்கு இருக்கிற இமேஜ் வேறு. இந்தப் படம் கவர்ச்சியா இருக்கு. வாசகர்கள் ஏற்றுக்க மாட்டாங்க...’ என்று கூறியவர், அந்த நடிகை குடும்பப் பாங்காக உடையணிந்திருந்த போட்டோவைத் தேர்வு செய்து கொடுத்தார். அதுதான் அந்த இதழ் அட்டைப் படமாக வந்தது.

என்னதான் சென்டிமெண்ட் கதையாக இருந்தாலும் அது நம்பும்படியாக பிராக்டிகலாக இருக்க வேண்டும். ஜோக்குகள் குபீரென்று சிரிக்க வைக்க வேண்டும. கட்டுரைகளின் மொழிநடை சரளமாக மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் பெண்கள் தவறு செய்வதுபோல் வரும் ஜோக், கதைகளை அவர் அனுமதிக்க மாட்டார். ‘அவர்களும் நம் புத்தகத்தைப் படிக்கிறார்கள். அவங்க மனம் புண்படக் கூடாது...’ என்பார். தொழில் சார்ந்து கிண்டலடிக்கும் க்ளிஷே ஜோக்குகளை நிராகரிப்பார்.

ஒரு கட்டுரையோ, கதையோ வாசகர்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைப் படித்தவுடன் சொல்லி விடுவார். அதில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் கூறுவார். எடிட்டோரியல் மீட்டிங்கில் ஜூனியர்கள் சொல்லும் யோசனைகள் சில நேரங்களில் என்னைப் போன்ற சீனியர்களால் கலாய்க்கப்படும்போது, ‘இல்லை... அதில் ஒரு ஐடியா இருக்கு. டெவலப் செய்யலாம்...’ என்று கூறி, அதற்கு ஒரு கோணம் எடுத்து டெவலப் செய்வார். இறுதியில் அது அந்த வார கவர்ஸ்டோரியாக வெளிவரும். அந்த ஜூனியர் அடையும் சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமோ?

உளவியல் அறிந்தவர்

குமுதத்தில் நான் சேர்ந்தபோது, எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட நெருக்கடிகள். தவிர்க்க முடியாத அத்யாவசிய காரணங்களால், கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. சில வட்டியுள்ளவை. சில வட்டியில்லாதவை. கிட்டதட்ட அப்போது நான் வட்டி மட்டுமே மாதம் 2 ஆயிரம் ரூபாய் கட்டி வந்தேன். அந்தக் கடன் கவலைகளால் என்னால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. நான் பணியில் சேர்ந்து சுமார் மூன்று மாதங்கள் ஓடியிருக்கும். ஒருநாள் சேத்துப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது கார் ஹாரன் ஒன்று பின்பக்கம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. கவனம் சிதைந்து திரும்பிப் பார்த்தேன். என்னை ஒட்டி வந்து நின்றது அந்த கார். சடாரென்று பின்புற சீட்டின் கதவைத் திறந்து. ‘உள்ளே வாய்யா....’ என்று அழைத்தவர் வரதராஜன். முதலில் அதிர்ந்து பின் தயங்கியபடியே அவரது அருகில் ஒண்டிக் கொண்டேன். கார் நகர்ந்தது. அந்த வார குமுதம் இதழ் பற்றி விசாரித்தவர், பிறகு இயல்பாகக் கேட்டார். ‘உங்களுக்கு என்னதான் பிரச்சினை? எப்பப் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கீங்க? ஏதாவது பிரச்சினை இருந்தா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்... என் ஸ்டாஃப் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு சந்தோஷம்... பெருமை...’ என்றார்.

என் கடன் பிரச்சினைகளைப் பற்றி பட்டும் படாமல் சொன்னேன். ‘இவ்வளவுதானா பிரச்சினை? அவசரமா எவ்வளவு வேண்டும்?’ என்றார். சொன்னேன். பிறகு அலுவலகம் வந்தோம். மதியம் 12 மணியளவில் காசாளர் கூப்பிட்டார். சென்றேன். ‘எம்.டி. கொடுக்கச் சொன்னாரு... வெளியிலே சொல்லிடாதீங்க...’ என்று அவர் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் நான் கேட்டிருந்த தொகையை விட கூடுதலாகவே பணம் இருந்தது. இதுபோல் வெளியே சொல்லிடாதீங்க என்று கூறி, அவர் ஏகப்பட்ட பேருக்கு உதவி செய்திருப்பதாகப் பின்னாட்களில் நண்பர்களின் வழியே அறிந்து கொண்டேன்.





தொலைநோக்கு உள்ளவர்

அவருக்கு நிறுவனம் குறித்த ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். நிறுவனம் குறித்த தகவல்களை வெளியில் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டார். தீபாவளி பொங்கல் சமயங்களில் மூன்று மாதத்துக்கு முன்பே சிறப்பிதழ்கள் குறித்த திட்டங்கள் தொடங்கி விடும. ஐடியாக்கள் பேசி, அதன் ஸ்டேடஸ் ரிப்போர்ட் தினமும் விசாரித்துக் கொண்டே இருப்பார். இஷ்யூ இன்சார்ஜின் பணி அழுத்தம் இதனால் வெகுவாகக் குறையும்.

குமுதம், கல்கண்டு என்று இரண்டு இதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிறுவனத்தில் இன்று பக்தி, சிநேகிதி, ரிப்போர்ட்டர், ஜோதிடம், ஹெல்த், தீராநதி என்று வகைக்கு ஒன்றாக இதழ்கள் பெருகியிருக்கக் காரணம் அவரது ஆர்வமே. இத்தனை இதழ்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதுகுறித்த எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவே அனைத்துச் செயல்களும் அமைந்தன. குமுதம் இணைய தளத்தில் இந்தப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்தைக் கொண்ட தனித்தனிப் பக்கங்களை உருவாக்க வைத்தார். இணைய தளத்தை வலுப்படுத்தப் போகிறோம் என்று வெளியில் தோற்றத்தை உருவாக்கி ஆட்களைப் பணிக்கு அமர்த்தினார். ஒரே நேரத்தில் நாற்பது ஐம்பது பேர் பணிக்குச் சேர்க்கப்பட்டவுடன் மற்றவர்கள் தங்கள் பணிப் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுவதை உணர்ந்த அவர், அவர்களுக்குப் பணி நிரந்தரக் கடிதம் வழங்கினார். இப்படி யாருக்கும் நெருடல் இல்லாமல் ஆட்களை தேர்வு செய்து படிப்படியாக புதிய பத்திரிகைகளை வெற்றிகரமாகக் கொண்டு வந்தார்.

உழைப்பினை மதிப்பவர்

அந்த வாரம் என் இஷ்யூ. அப்போது நான் சினிமாப் பகுதி இன்சார்ஜ். நிறைய கட்டுரைகள் திருத்தி எழுத வேண்டியிருந்த்து. காலை 9.30 மணிக்கு ஆபீஸ். சகாக்கள் எல்லோரும் வந்து விட்டால், திருத்தி எழுதுவது சிரமமாகிவிடும். யாராவது வந்து ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆகவே, மற்றவர்கள் ஆபீஸ் வருவதற்கு முன்பே ஆபீஸ் சென்று வேலையை முடிக்க முடிவெடுத்தேன்.

விடிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்துத் தயாராகி 5 மணி ரயில் பிடித்து ஐந்தரை மணிக்கெல்லாம் என் சீட்டில் உட்கார்ந்து கட்டுரைகளைச் சரிசெய்து கொண்டிருந்தேன். யாருமற்ற தனிமையில் கட்டுரைகள் என்னுடன் உரையாடி தனக்கான வார்த்தைகளைத் தானே தேர்வு செய்து தன்னைத் தானே சரிசெய்து கொண்டிருந்தன.

அப்போது ஆறு மணியிருக்கலாம். நான் நடிகை ரோஜாவுடன் மனம் லயித்து உரையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் பின்பக்கம் யாரோ வந்திருப்பதுபோல் சலனம். ஹவுஸ் கீப்பிங் வந்திருப்பார்கள் என்று நினைத்து நான் ரோஜாவின் கட்டுரையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

‘குட்மார்னிங் கருணாகரன்...’ என்று அதிரும் குரல். ‘அட, இது நம் எம்.டி.யின் குரலாச்சே...’ என்று அடையாளம் கண்டு துள்ளியெழுந்தேன். எதிரே வரதராசன். இரவு முழுதும் பிரஸில் பிரிண்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், காலையில் பிரீ பிரஸ் வந்திருக்கிறார். நான் வந்திருப்பதாக யாரோ கூற அப்படியே எடிட்டோரியலுக்குள்ளும் வந்திருக்கிறார்.

‘என்ன கருணா இந்த நேரத்தில்?’ என்றார்.

‘நிறைய மேட்டர்களை ரீரைட் செய்ய வேண்டியிருக்கு சார்...’ என்றேன்.

‘வெரிகுட்... கீப் இட் அப்....’ என்று கூறிவிட்டுச் சென்றார். அடுத்த இன்கிரீமெண்ட்டில் எனக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்வு வழங்கப்பட்டிருந்தது. 

மதவுணர்வைக் கடந்தவர்

அவர் வைணவர். பொதுவாக சைவர்களை விட வைணவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் அதீத பற்றுள்ளவர்கள். அவர்கள் திருமண், எட்டெழுத்து மந்திரம் ஆகியவற்றை உயிராக மதிப்பவர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒருமுறை உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பலத்த அடிவாங்கியது. அந்த வாரத்துக்கான கார்ட்டூன் ஐடியாவாக இந்திய ரசிகர் படம் ஒன்றை வரைந்து, அவரது நெற்றியில் கிரிக்கெட் ஸ்டம்புகள் நாமம் போல் அமைந்திருக்க வேண்டும் என்று ஓவியர் சேகரிடம் ஐடியா கொடுத்தேன். அந்தக் கார்ட்டூனைப் பார்த்த சீனியர் ஒருவர், ‘கார்ட்டூனை டைரக்டர் ஓகே செய்ய மாட்டார். இது வைணவர்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. டைரக்டரிடம் அனுப்பி ஓகே வாங்கி விடுங்கள்...’ என்று அறிவுறுத்தினார். நான் அதனை டைரக்டரிடம் அனுப்பினேன். அவர் அதற்கு ‘வெரி குட்’ என்று குறிப்பெழுதி பெரிய ‘டிக்’ மார்க் போட்டு அனுப்பியிருந்தார். சிறிது நேரத்தில் கீழே எடிட்டோரியலுக்கு வந்த அவர், ‘வாசகருக்கு எது பிடிச்சிருக்கோ அதுதான் நம்ம மதம்...’ என்றார்.

இதேபோன்று இன்னொரு அனுபவமும் உண்டு. குமுதம் பதிப்பாளர் அமரர் பி.வி.பார்த்தசாரதி அவர்களின் 80வது பிறந்த நாளுக்குச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் வழங்கியிருந்தார் வரதராசன். அந்த மலரில் பப்ளிஷரைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அந்தக் கவிதையில்,
‘வைணவர்கள் உச்சரிக்கும்
எட்டெழுத்து மந்திரத்தை
பப்ளிஷர்-
உச்சரிக்க மறந்திடினும்-
‘குமுதம்’ எனும்
நான்கெழுத்து மந்திரத்தை
உச்சரிக்க மறந்ததில்லை!
செய்யும் தொழிலே தெய்வமன்றோ!’
என்று எழுதியிருந்தேன். இந்த வரிகளையும் டைரக்டரிடம் காட்டி அனுமதி வாங்கி விடச் சொன்னார்கள். இல்லையென்றால் பிரச்சினையாகி விடும் என்று பயமுறுத்தினார்கள். கவிதையை அவரிடமே எடுத்துச் சென்று காட்டினேன். அவர் அந்த வரிகளைப் படித்து, ‘பிரமாதம். உண்மையைத்தானே எழுதியிருக்கீங்க... பப்ளிஷர் அப்படிதான் வாழ்ந்தார்...’ என்று பாராட்டினார்.

தொழிலின் காதலர்

வேலையில் அர்ப்பணிப்பு, வெற்றியின் மீது வெறி. அவரை உற்சாகக் குறைவாக ஒருநாளும் நான் கண்டதில்லை. எப்போது சந்தித்தாலும் எப்படி போய்க்கிட்டிருக்கு? எனி பிராப்ளம்? என்று ஆபீஸ் நிலவரத்தைக் கேட்டுவிட்டுதான் மற்ற விஷயங்களுக்கு வருவார். அவர் வெளிநாடு சென்றிருந்தாலும் அவர் மனம் குமுதம் ஆபீசையே நினைத்திருக்கும். அங்கிருந்து தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிர்வாகம், எடிட்டோரியல் ஆட்களிடம் பொஸிசன் ஸ்டேடஸ் கேட்டுத் தெரிந்து கொள்வார். எங்கேயாவது தாமதம், தவறு இருப்பதுபோல் அவருக்குத் தோன்றினால், அதனை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குவார்.

அலுவலகத்தில் ஒரு கறாரான எம்.டி.யாக இருந்தாலும் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்லும்போது, ‘இப்போ நான் உங்க முதலாளி இல்லை. ஃபீல் ஃபிரீ...’ என்று ஜாலியாக அரட்டையடிப்பார். அவரைப் பொறுத்தவரை ‘கன்டென்ட் ஈஸ் தி கிங்...’. வழ வழ தாள், உயர்தரமான அச்சு இவற்றை விட உள்ளடக்கம் ஸ்பைஸியாக இருக்க வேண்டும் என்பார்.

அவரைக் கோபக்காரர் என்று பலரும் கூறுவதுண்டு. நானும் சிலநேரங்களில் அதனை நேரில் கண்டிருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். அவர் ஒருவர் மீது கோபப்பட்டால் அந்த நபர் மீது மட்டுமே அந்தக் கோபம் இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் எதிர்பாராத விதமாக நாம் நுழைந்துவிடும்போது, ‘வாங்க கருணாகரன்...’ என்று அவர் நம்மை வரவேற்பார். அந்தக் குரலில் சிறிது கூட சில நொடிகளுக்கு முன்பிருந்த கோபத்தின் சாயலே இருக்காது. நான் அவரது கோபத்தை ஒரு நிர்வாக உத்தியாகவே பார்க்கிறேன்.

அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உண்டு. சுருக்கமாய்ச் சொன்னால், அவர் ‘நம்பினோர்க்கு வரதராசன்...’

சனி, 29 மார்ச், 2014

பெரு மரமாகிப்போனதொரு வாழ்வு


      ஒரு மகா கலைஞனின் முழுமையான இறப்பு பாலுமகேந்திரா அவர்களுக்கு வாய்த்துள்ளது என்று சொன்னால் அது சாதாரண சொல்லல்ல; காலத்தினூடே இடையீடாக வெட்டி எழுதப்படும் ஒரு அமர சொல். அவரது ஆதர்சமான அழகு அவரது இறப்பிலும் தலைமாட்டில்  நின்றெரியும் காலதீபத்தின் அமர விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து ஒரு கலைஞனாக கனவுகளை முழுமையாக நிறைவேற்றியவனது பயணம் அவருடையது. அவர் கடைசிவரை அவருடைய வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகவே  தனி ஆளுமையாகவே செய்திருக்கிறார்.

     பாலுமகேந்திரா சினிமா பட்டறை,திரைப்படத் தயாரிப்பு, இயக்கம்  இவற்றோடு விழாக்களில் பங்கெடுப்பது வெளிவிவகாரங்கள் இவை எவற்றுக்கும் அவர் யாரையும் அடுத்த நிலையில் பிரதானமாக வைத்துக்கொண்டதில்லை. இதற்கு நம்பிக்கை ஒரு காரணம் அல்ல. மாறாக அவர் தன்  காரியங்களைத் தானே நேரடியாக செய்யவிரும்புவார். தன் தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் தனக்கு நேரடியான தொடர்பு இருக்க-வேண்டும் என விரும்புபவர். பாலுமகேந்திரா சினிமா பட்டறைக்குக் கூட அவர்  நடிப்பு தவிர்த்து இதர வகுப்புகளுக்கு கூட வேறு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. கிட்டத்தட்ட தனி மனிதனாகவே அவர் தன்னையும் தன் சார்ந்த செயல்பாடுகளையும் நிர்வகித்துக்கொண்டார்.

     74 வயதில் ஒருவர் அப்படி நடந்து கொண்டது அக் காரியங்களுக்குள் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பிடிப்பு இவற்றைத் தாண்டி அக்காரியங்கள் அவர் தனது இறுதிநாளுக்கு முன்பாக தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ற உணர்வோடு செயல்பட்டமைதான் அதற்கு காரணமாக இருந்து வந்திருக்கிறது.

    குரசேவாவின் ‘இகிரு’ படத்தின் நாயகன் போலத்தான் அவருடைய  தீவிரம் இருந்து வந்தது.  அப்படத்தில் நாயகன் வாட்டனபே. வயது முதிர்ந்த  நகராட்சி அதிகாரி. இறப்பு நெருங்கிவிட்டதொரு தருணத்தில்  இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாக்கிவிடும் மனப்பிரயாசையுடன் அவர் உழன்று கொண்டிருப்பார்.   இறுதியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்றை  நிர்மாணித்து விடுவதென முடிவெடுத்து அக்காரியத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வார்.
கிட்டத்தட்ட இறுதி நாட்களில் பாலுமகேந்திராவின் முகமும் இகிருவின் வாட்டனபேவினுடையதைப் போலவே மாறி இருந்தது. சினிமா பட்டறை துவங்கிய பின்பும் கூட அவர் முகம் தீவிரத்தைத் தேடியது. அந்த தீவிரம் என்னவாக இருக்கும்? மனிதர் இந்த வயதில் எதற்காக பிரயாசைப்படுகிறார்? என்ற கேள்விகள் அடிக்கடி எழும். நானும் கூட  இரண்டு மாதங்களுக்கு முன் சிட்டி சென்டரில் நடந்த திரைப்படவிழாவில் வி.ஐ.பி.க்கான லவுஞ்சில்  நிதானமாக அவருடன் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவரது இன்னும் நிறைவேற்ற முடியாத கனவாக சிலவற்றை சொன்னார். அதில் ஒன்று நூறு பேரிடம் 50,000_ம் ரூபாய் வாங்கி கூட்டுறவு முறையில் நல்ல படம் எடுப்பது. எந்த சமரசமும் இல்லாத அவரவர் விருப்பத்தோடு கூடிய சுதந்திர சினிமாவாக இருக்கவேண்டும், உன்னைப் போன்றவர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். ஆனால் அடுத்த சில நாட்கள் கழித்து அவரது ‘தலைமுறைகள்’  படம் வெளியானபோது அவர் கனவு வெறும் சினிமா  சார்ந்தது மட்டுமல்ல சமூகம் சார்ந்ததும் கூட என்பதை அறிந்து கொண்டேன்.




   ‘இகிரு’வில் நாயகன் வாட்டனபே  இறுதியில் அப்படி ஒரு பூங்காவை உண்டாக்கி  பனிகொட்டும்  நள்ளிரவில் அந்த ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் ஆடியபடி திறப்பு விழாவுக்கு முந்தின நாள் நிம்மதியாக  இறந்து போவான்.
பாலுமகேந்திராவின் கடைசி சுவாசமும் கூட அப்படியாகத்தான் பிரிந்தது. கிட்டத்தட்ட வாட்டனபேவினுடையதைப் போல அமைந்தது. அவர் சினிமாபட்டறையில் உடல் கிடத்தப்பட்டிருக்க அங்கு பயிலும் மாணவர்கள் அவரது உடலைச் சுற்றி பாதுகாப்புச் சங்கிலியாக கைகோர்த்து நின்ற காட்சி அவரது லட்சியக் கனவின் உருவகம் போலவே இருந்தது.

   அவரது இறுதி ஊர்வலமும் அவர் மயான மேடையில் சாம்பலாகிய பின்னும் அகலம றுத்த கூட்டமும் அதற்கு சான்று. அனைவருமே அவரோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கப்பட்டிருந்தனர். எது எல்லோருக்குள்ளும் அவரை நோக்கி ஈர்க்க வைத்தது என்று யோசித்த போது தமிழ்த் தலைமுறைக்கு அவர் துவக்கி வைத்த காட்சி வழிப் பாதையும் காட்சியியல் தொடர்பான மெனக்கெடலும் சிந்தனையும் ஆரோக்கியமான கலைச் சூழலுக்கான சமரசமில்லாத மிடுக்கான வாழ்வும் சினிமாக்காரர்களின் சொகுசையும் பவிசையும் பணத்தையும் அனாயாசமாக சுண்டு விரலால் ஒதுக்கிய திமிரும்தான் என்பதை உணர முடிந்தது.

   எழுபதுகளின் இறுதியில் தமிழ்ச் சூழல் கொஞ்சம்  முகத்துக்கு சோப்பு போட்டு கழுவிக்கொண்டு  கண்ணாடி  பார்த்து  தன்னை திருத்திக் கொண்டபோது பாலுமகேந்திரா புதிய சட்டகங்களின் மூலமாக அசையும் பிம்பங்களுக்குள் ஒரு கவித்துவத்தை நிகழ்த்தினார்.  முன்னதாக தேவராஜ், மோகன், பாரதிராஜா போன்றோருடைய படிநிலை-மாற்றங்கள் தமிழரின் ரசனையை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்த உன்னதமான தருணம் அது.

    சினிமா பாணியில் சொன்னால் தமிழ் சினிமாவுக்கு ஒரு சன்ரைஸ் ஷாட் நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்கள். அதுவரை வசனங்களையும் கதாபாத்திரங்களையும்  மட்டுமே நம்பிய தமிழ் சினிமா பின் புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்த நேரம்.
இத்தனைக்கும் நிவாஸ் போன்றவர்கள் ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ போன்ற பாரதிராஜாவின் படங்கள் மூலமாக செறிவான கட்டமைவை காமிரா கோணங்களில் நிகழ்த்திக்-கொண்டிருந்தாலும்.. இயற்கையின் நுண்மையை சூரிய பிரபையில் பிரதிபலிக்கும் மனிதர்களைக் கடந்த இதர உயிரிகளின் அழகை அதன் இயல்போடு மிகைப்படாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டிய கலைஞன் பாலுமகேந்திரா ஒருவரே.

    அழியாத கோலங்களின் ‘பூவண்ணம் போல நெஞ்சம்’  பாடலில் ஷோபா, பிரதாப் போத்தன் நடந்து வரும் காட்சிகளில் அவர்களைக் காட்டிலும் உற்சாகமாக காற்றுக்கு தலையாட்டும் ஆற்றோர வளர்ந்த நாணல்களின் நெஞ்சை அள்ளும் அழகு தமிழ் சினிமாவின் கவித்துவங்களுக்கு  துவக்க புள்ளி.. மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்ற ஓடை, வயல்வெளி, மணற்பரப்பு, பாலம், மரங்கள், நாணல், புதர்கள் ஆகியவையும் பாத்திரங்களாக மாறி தமிழின் நிலப்பரப்புக்கான சினிமாவாக அழியாத கோலங்கள் உயிர் பெற்றிருந்தது. ஒளிப்பதிவில் பேக் லைட் எனப்படும்  உத்தியை இதுவரை இவரைப்போல இயற்கை ஒளியில் வெகுசிறப்பாக கையாண்டவர்கள் வேறு எவரும் இல்லை. இவருக்கு அடுத்தபடியாக அதில் கைதேர்ந்தவராக அசோக்குமார் தனிச்சிறப்பு கொண்டவராக இருந்தாலும் முதன்முதலாக பொன்னிற கேசங்களை இயற்கையான பின் ஒளியில் நிகழ்த்திக் காட்டிய சினிமா கவித்துவம் அவருடையது.

   அவருக்குப் பிறகு வந்தவர்களில்  இயற்கை ஒளியை செறிவாக திரை சட்டகத்தில் உள்வாங்கிக் கொண்டவர்களுள் அசோக் குமார் , ராஜீவ் மேனன், மது அம்பாட் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த உயரங்களைக் கண்டிருப்பினும் அவர் காண்பித்த பச்சை நிறத்தை  வேறு எவரும் காண்பிக்கவில்லை. இதற்காக வண்ணக்கலவை செய்யும் கிரேடிங்கில் அக்காலத்தில் எந்த கம்ப்யூட்டர் உபகரணங்களும் இல்லாமல் கைகளால் ஒவ்வொரு காட்சியாக சரிசெய்து வந்த காலங்களில் ஆங்கிலத்தில் லில்லி எனப்படும் புதிய உத்தியை இதற்காக அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும்  பாத்திரங்களின் உடலில் காணப்படும்  மவுனம் வேறு எவருக்கும் சித்திக்கவில்லை..  அவர் வெறும் ஒளிப்பதிவாளர் என்பதைக் கடந்து இயக்குனராகவும் தொழில் நுட்ப மேதைமையைக் கடந்த ஒரு அகதரிசனம் அவருக்குள் இருந்ததுவும் ஒரு காரணம்.இதே போல சில் ஹவுட் ஷாட்டுக்கு முதன் முதலாக கைதட்டல் வாங்கியதும் அவரது ஒளிப்பதிவு மூலமாகத்தான். இதற்கு முன் கறுப்பு  வெள்ளையில் சில் ஹவுட் ஷாட்டுகள் இடம்பெற்றிருப்பினும்  அவரது படங்கள் மூலம்தான்  அவை அழகியலின் கூறுகளுடன் பாமர ரசிகனும் கைதட்டுமளவிற்கு ரசனையை மேம்படுத்திருக்கிறார்.




    நாயகன் என்றாலே அவன் சிவப்பாக இருக்கவேண்டும் கறுப்பாக இருந்தால் வசீகரமாக அல்லது எல்லோரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவனாக இருக்க-வேண்டும் என்பதையெல்லாம் பிரதாப் போத்தனின் சோடாபுட்டி கண்ணாடி மூலமாக உடைத்தவர். அழியாத கோலங்களில் கோமாளி போன்ற பிரதாப்பின் தோற்றம் துவக்கத்தில் அனைவருக்கும் புதிராகத்தான் இருந்திருக்கக்கூடும்.. ஆனால் அதே தோற்றம் ‘மூடுபனி’ திரைப்படத்தில் கொலைகாரனாக  மாறிய தருணத்தில் அனைவரும் அதிர்ந்து போனதும் உண்மை.

   உண்மையில் பாலு மகேந்திரா என்ற பெயர் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்ததற்கு மூடுபனிதான் ஒரு முக்கிய காரணம். த்ரில்லர் என்பதைத் தாண்டி தமிழில் அசலான பிலிம் நோயர் வகைப்படமாக அது வெளிப்பட்டிருந்தது.படத்தில் பாத்திரத்தின் பார்வைக் கோணத்தில் கேமரா ஒவ்வொரு அறையாக தேடி பார்க்கும். அந்த குறிப்பிட்ட ஷாட்  தமிழ் சினிமாவின் ரசனையை ஒரு அங்குலத்துக்கு உயர்த்தியது மட்டுமல்லாமல் பாலுமகேந்திரா என்ற நவீன தொழில்நுட்பக் கலைஞனை மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது.

    மேற்சொன்ன படங்களில் பாடல் காட்சிகளின் படமாக்கப்பட்ட விதமும் அவரது தனித்த அடையாளம். அதுவரை இசைக்கேற்ப அதன் தாளத்திற்கேற்ப கேமரா முன் நடிக _ நடிகையர் நடனம் ஆடிக்கொண்டிருந்ததை அபத்தமாக ஒதுக்கித் தள்ளி சாதாரணமாக நடந்து வருவது .. நாயகி நாயகன் சிரிப்பது பாடல் வரிகளைப் பாடாமல் அல்லது வரிகளுக்குத் தொடர்பில்லாமல் காதலின் மகிழ்வூட்டும் தருணத்தில் லயித்துக் கிடப்பது போன்ற காட்சிகளை தொகுத்துக் கொடுப்பது ஆகியவையும் அவரது காட்சியியல் தனித்துவங்கள்.
அதேபோல  அவரது படங்களுக்கென அவரது கதாபாத்திரங்களுக்கென பிரத்யேக உடைகளை அவர் வரித்துக்கொண்டார். தலையை விரித்துப் போட்ட  நிலையில் நாயகியை திரையில் காண்பிப்பது அபசகுனமாகக் கருதப்பட்ட காலத்தில் முதன்முதலாக தலையைப் பின்னாமல் அல்லது ஜோடனை எதுவும் இல்லாமல் ஷோபாவை  ஒரு புடவை ஒரு குங்குமப்பொட்டு ஆகியவற்றின் மூலம் தமிழ் அடையாளம் சார்ந்த அழகியலைக்கண்டு பிடித்தவர்.. மூன்றாம் பிறை திரைப்படத்தில் ‘பொன் மேனி உருகுதே’ பாடல் காட்சியில் இருவருக்குமான உடைத் தேர்வு இன்று வரை அப்பாடலை  தமிழின் சிறந்த சினிமா பதிவாக காப்பாற்றித் தந்துள்ளது என்றால் மிகையில்லை.

   எந்த தருணத்திலும் கதையின் வேகத்தைக் கூட்டுவதற்காக அவர் கதை நிகழும் இடத்தைக் காண்பிக்காமல் விட்டதில்லை. அது ஒரு அலுவலகமாக இருந்தால் அதன் முகப்பு அல்லது பெயர்ப் பலகை காண்பிக்கப்படும். வீடாக இருந்தால் வாசல் கதவு இதெல்லாம் காண்பிக்கப்பட்டபின்தான் வீட்டுக்குள் நுழைவார். படம் பார்ப்பவனுக்குள் கதையின் நிகழ்வு முழுமையாக இருக்க வேண்டுமானால் அவனுக்குள் நிலவியல் ரீதியான புரிதல்கள் அவசியம்  வேண்டும் என்பார். அவர் படைப்பின் ஒழுங்குக்கு இவை மிக முக்கியமாக பங்காற்றி வந்துள்ளன.

   அவரது அனைத்து திரைக்கதைகளின் முடிவும் அவரது இன்னொரு தனித்துவம், அவர் ஒரு போதும் இறுதிக்காட்சியில் கதாபாத்திரங்களைப் பேச விட்ட-தில்லை. இரண்டு முரண்களைக் காண்பித்து பார்வையாளனின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்கு-வதில் மட்டுமே அவர் தீவிர கவனம் செலுத்துவார்.. அழியாத கோலங்களின் இறுதிக்-காட்சி போல நம்மை பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மூன்றாம்பிறை, மறுபடியும், யாத்ரா (மலையாளம்) வீடு, சந்தியாராகம்  என அவரது திரைக்கதைகளின் முடிவு பெரும் காவியத்தன்மைக்குள் செல்வதாகவே இருந்து வந்துள்ளது. காட்சி ரீதியான பெரும் அழகியல் தன்மை கொண்ட யாத்ராவின் இறுதிக்காட்சி  அவரது மேதைமையின் உச்சம் என சொல்லலாம்.

   ‘நீங்கள்கேட்டவை’ அவருக்கான வகைமாதிரியான படம் அல்ல; என்றாலும், அதன் மூலம் பானுசந்தர், அர்ச்சனா என இரண்டு நட்சத்திரங்களின் உதயத்திற்கு அத்திரைப்படம் தன் கடமையை நிறைவேற்றியிருக்கிறது.‘ஓ வசந்த ராஜா...’  பாடல் காட்சி மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கேமரா மூலம் இரண்டாவது முறையாக கட்டியமைத்த ராஜேந்திர சோழன் அவர். கருத்த அழகியை தமிழ் முதன் முதலாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டது. வெள்ளைத் தோல்தான் அழகு என்ற தமிழரின் பொதுப்புத்தியில் கரடுதட்டிப்போன  ரசனையை தடம் மாற்றி கருத்த பெண்களின் கவர்ச்சியான அழகை மாற்றி நிறுவியவர்.
திரைப்படத்துறையின் இத்தகைய சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணமில்லை. மாறாக அவர் திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரைப் பண்புகள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்.

     வணிக சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். புகழின் உச்சத்தில் இருந்த போதும் அவர்  சாதாரண மனிதருக்கான வாழ்க்கையையே வாழ்ந்தார். சாதாரண அம்பாசிடர் கார்மட்டுமே வெகுநாட்களாக வைத்திருந்தார். அதுவும் கூட இல்லாமல் பல சமயங்களில் ஆட்டோவில் செல்பவராக இருந்து வந்தவர். அவரது வளர்ப்பு மகனான இயக்குனர் பாலாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அவர் வாங்கிக் கொடுத்த உயந்த ரக காரை பயன்படுத்தத் துவங்கினார். தாஜ் ஹோட்டலில் நடந்த ‘மறுபடியும்' வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா, ‘உங்களை போல எந்த சமரசமுத்துக்கும் ஆட்படாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்வது என்னை வெட்கம் கொள்ள வைக்கிறது’ என வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார்.

சனி, 22 மார்ச், 2014

கால்டுவெல் & தமிழ்மொழியின் அடையாளம்

கால்டுவெல் & தமிழ்மொழியின் அடையாளம் 

கால்டுவெல்லின் (1814 &- 1891) இருநூறாவது ஆண்டுவிழா 2014&ல் நடைபெறுகின்றது. தமிழ்மொழியானது வடமொழியில் இருந்து வேறுபட்ட தனித்துவமான பண்பு உடையது என்பதையும்; இந்தியாவில் மிகப் பழமையான காலத்தில் இருந்தே தனக்கான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு வளர்ச்சியடைந்து வந்த ஒரு மொழி என்பதையும் உலக அறிஞர்களுக்கு நிரூபித்துக் காட்டியவர் கால்டுவெல். தமிழராக இருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நினைவை நெஞ்சில் நிறுத்துவது நன்றியின் அடையாளமாக இருக்கும். ஏனென்றால் அவர் தமிழ்நாட்டில் (1838) காலடி எடுத்து வைத்த நாட்களில் தமிழர்களே தமிழ்மொழியின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தனர். இன்று நாம் நம்முடைய மொழியை எந்த வகையாக நாளுக்குநாள் கொன்று வருகிறோமோ அதேநிலை அன்று நிலவியது.

19&ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகமும் (இந்தியா) இலங்கையும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு-விட்டன. அந்தக் கம்பெனியின் நிருவாகத்திற்கான ஊழியர்கள்  அதிகாரம் உடையவர்களாகவும், செல்வவளம்- மிக்கவர்களாகவும், மரியாதைக்குரியவர்-களாகவும் உள்நாட்டு மக்களால் கருதப்-பட்டனர். இதனால் கம்பெனியின் பதவிகளைப் பெறுவதே தமிழர்கள் பலரின் வாழ்க்கையின் குறிக்கோளாக மாறிவிட்டது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அவர்கள் ஆங்கிலம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.



அந்தக் காலத்தில் தமிழ்-நாட்டிலும் இலங்கையிலும் பாரம்பரியமாக கல்வியறிவு பெற்ற வாய்ப்புடையவர்களாக நான்கு ஐந்து சாதியினரே இருந்தனர். பெரும்பாலான தமிழ்மக்கள் கைநாட்டுப் பேர்வழிகளாகத்தான் வாழ்ந்து வந்தனர். அதுகாலம் வரையில் தமிழ்மொழியில் கல்வி கற்று வந்த அந்தச் சாதியினர் காலத்துக்-கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்காக தங்களுடைய தாய்மொழியையே புறக்கணித்து விட்டனர். இதனால் அத்தகைய சாதிக்-காரர்களால் அதுகாலம்வரை பயிலப்பட்டு வந்த தமிழ்மொழி கல்விப்புலத்தில் இருந்து புறக்கணிக்கப்-பட்டது. எனவே பல்லாயிரம் தமிழ்நூல் சுவடிகள் பேணிக்காப்போர் இல்லாமலும் படி எடுப்போர் இல்லாமலும் அழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் விளைவாக அந்தக் காலத்துக்கு முன்பு புகழ்பெற்று இருந்த தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பல நூல்களை அடுத்த தலைமுறையினர் மறந்துவிட்டனர்.
 
1820 தொடங்கி இலங்கையில் அமெரிக்க மிஷனரிமாரும் தமிழ்நாட்டில் ஐரோப்பிய பாதிரியார்களும் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்காக மக்கள் மத்தியில் பல்வேறு பணிகளைச் செய்தனர். கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளைக் செய்வதற்காக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை நிறுவினர். அப்படி அவர்களால் (ஆண்டர்சன்) 1837&ல் நிறுவப்பட்டது-தான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி. 1842&ல் மதுரை அமெரிக்கன் கல்லூரி தொடங்கப்-பட்டது. இந்தக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வடக்குப் பகுதியில் அமெரிக்க மிஷனரிகளால் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்-பட்டன. இந்தக் கல்வி நிலையங்கள் ஆங்கிலத்தின் வழியாகக் கல்வி கற்பித்தன. தமிழ்மக்கள் இத்தகைய கல்வி நிறுவனங்களால் சிறப்பான கல்வியைப் பெறும் வாய்ப்பைப் பெற்ற அதே நேரத்தில் தங்களுடைய பாரம்பரியமான கல்வியையும் பண்பாட்டையும் இழக்கத் தொடங்கினர். 


இப்படி ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட நம்முடைய மொழியை அயல்-நாட்டவர்களாகிய கிறிஸ்துவப் பாதிரியார்களும் ஒரு சில அரசாங்க அதிகாரிகளான ஆங்கிலேயர்களும்தான் மீண்டும் உயிர்ப்பித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வரலாறும் இன்றைய தமிழ்மக்களால் மறக்கப்பட்டுவிட்டது. டாக்டர் டானியல் புவர், லீவை ஸ்போல்டிங், மைரன் வின்சிலோ, டாக்டர் எச்.ஆர்.ஹொய்சிங்டன், சாமுவேல் பிஸ்க் கிறீன் போன்றவர்கள் இலங்கையிலும் எல்லிஸ், ராட்லர், ட்ரு(பீக்ஷீமீஷ்), சார்லஸ் கிரால், டாக்டர் கால்டுவெல், ஜான்முர்டாக், எச்.பவர் போன்றவர்கள் இந்தியாவிலும் செய்த பணிகளால் அழிவுநிலையில் இருந்த தமிழ்மொழி காப்பாற்றப்-பட்டது. கூடுதலாக அன்றைய கல்வி-நிலையங்களின் பாடத்-திட்டங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் கி.பி.1868&ல் பவர் பாதிரியாரால் அச்சிடப்பட்ட சீவக சிந்தாமணியின்நாமகள் இலம்பகம்Õ என்ற நூல்  அன்றைய பி.. பாடத்தில் சேர்க்கப்பட்டது. அந்தப் பகுதியை பாடமாகப் படித்த சேலம் இராமசாமி முதலியார் (நீதிபதியாக இருந்தவர்) முழுநூலையும் அச்சில் காணவேண்டும் என்ற ஆவல் உடையவராக இருந்தார். தன்னுடைய ஆவலை பிற்-காலங்களில்  .வே.சாமிநாத அய்யரிடம் கூறி, அவருக்கு ஒரு முழுமையான சிந்தாமணிச் சுவடியையும் கொடுத்தார். சீவகசிந்தாமணி சாமிநாத அய்யரால் முதன்முதலில் முழுமையாக நச்சினார்கினியர் உரையுடன் வெளியிடப்பட்டது (1887). இந்த நிகழ்ச்சிதான் தமிழ்-மக்களுக்கு பழந்தமிழ் நூல்களை மீட்டுக்கொடுத்தது. சாமிநாத அய்யரை தமிழ்த்தாத்தாவாக மாற்றி அமைத்தது. பவர் பாதிரியார் இல்லையென்றால் .வே.சா. என்ற ஒருவர் தமிழுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.
 
இதேபோன்று திருக்-குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்த ட்ரு, கிரால் போன்றவர்களால் மேல்நாட்டு-க்காரர்களுக்கும், ரோமில் இருந்த போப்-பாண்டவருக்கும் மற்றும் பலநாட்டுப் பாதிரியார்களுக்கும் பைபிளைப் போன்ற சிறப்புடைய நூல் திருக்குறள் என்ற கருத்து உருவானது. இந்தக் கருத்தானது இந்தியாவில் வழங்குகின்ற தமிழ்மொழியானது கிரேக்கம் எபிரேயம் போன்ற மொழிகளுடன் சேர்த்து வைத்து பேசத் தகுதியான மொழியாகும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கியது.


 
இப்படியான ஒரு நிலையை தமிழ்மொழி அடைந்து விட்டாலும் இந்திய மொழிகளுக்-கெல்லாம் தாயாகிய மொழி சமஸ்கிருதம்தான் என்ற கருத்து பல ஐரோப்பிய அறிஞர்களிடம் மேலோங்கி இருந்தது. தமிழர்களிலும் பலர் அக்கருத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். இத்தகைய கண்ணோட்டம் சரியானதல்ல என்றும் உண்மைநிலை இதற்கு மாறானது என்பதையும் கால்டுவெல் தன்னுடைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பைதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலாக 1856&ல் வெளியிட்டார். தமிழ்மொழி மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பேசப்பட்ட துதம், கோதம், கோண்டு போன்ற மொழிகளும் திராவிடமொழிகளின் குடும்பத்தைச் சார்ந்தவை என்று நிறுவினார். அந்த நூலில் திராவிடமொழிகள் தங்களுக்கே உரிய தனித்-தன்மைகளைக் கொண்டு செயல்படும் விதத்தை எடுத்துக்காட்டுகளால் விளக்கி நிலைநாட்டினார். அதிலும் தமிழ்மொழி சமஸ்-கிருதமொழிக்கு இணையாக இலக்கண இலக்கியங்களைக் கொண்டு நீண்ட காலமாகவே செயல்பட்டு வந்ததை மேல்-நாட்டு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு விளக்குகின்றார். 

கால்டுவெல்லின் ஒப்-பிலக்கண நூல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதனால் அந்நூலின் கருத்துக்கள் வெகு-விரைவாக ஐரோப்பிய மொழிநூல் அறிஞர்களிடையே பரவியது. அதன் விளைவாக தமிழ்மொழியின் வர-லாற்றுப் பழமையையும் மொழிக்கட்டமைப்பையும் இலக்கண இலக்கிய வளத்தையும் மேனாட்டவர்கள் தெரிந்துகொண்டனர். 
சுமார் 1000 ஆண்டுகள் சாதிகளாகப் பிளவுண்டு கிடந்த தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று அடை-யாளப்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய நிலை சுமார் 100 ஆண்டுகள் நிலவியது. இன்று அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் எந்த வகையிலும் ஒருங்கிணைக்க முடியாத தமிழ்ச் சாதிகளை திராவிடம் என்ற கருத்-தோட்டத்தால் ஒருங்கிணைத்த கால்டுவெல்லின் பணி மகத்தானதுதான்
 
இந்த நூலை 19 ஆண்டுகளுக்குப் பின் (1875) இரண்டாம் பதிப்பாக கால்டுவெல் வெளியிட்டார். முதற்பதிப்பிற்குப் பிறகு தான் செய்த ஆய்வுகளை 300 பக்கங்கள் இணைத்து இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இந்த இரண்டாம் பதிப்பில் தமிழ்மொழியின் பழமை என்ற கட்டுரை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதுஅந்தக் கட்டுரையில் தமிழ்மொழியின் இலக்கிய வரலாற்றை கால்டுவெல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றை இணைத்து தமிழ் இலக்கிய வரலாற்றை முதல்முதலாக எழுதி பின்வந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் கால்டுவெல்தான் என்றால் அது மிகையாகாது. 
இந்நூலை 1913&ல் சென்னைப் பல்கலைக் கழகம் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டது. இதில் 1875&ல் இரண்டாம் பதிப்பில் இருந்து சுமார் 250 பக்கங்கள் வரை நீக்கப்பட்டுவிட்டன. அதில் அவர் பறையர்கள்தான் பழந்தமிழர்கள் என்று எழுதியிருந்த முக்கியமான ஆய்வுக் கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.